Pages

Friday, May 6, 2011

ராகுலை நம்பி இளைஞர்கள் போகலாமா?

இளைஞர்களே... அரசியலுக்கு வாருங்கள்! எந்த ஊருக்கு போனாலும், ராகுல் இந்த அழைப்பை சொல்லத் தவறுவதில்லை. அவர் உண்மையிலேயே அழைக்கிறாரா? இவரை நம்பி இளைஞர்கள் போகலாமா? இப்படி நம் மனதில் கேள்விகள் எழுவது இயற்கைதான்!

மத்திய பிரதேசத்தில், மீனாட்சி நடராஜன் என்ற தமிழரை, எம்.பி., ஆக்கவில்லையா... தமிழகத்தில், இளைஞர் காங்கிரசுக்கு, 10 சீட் பெற்றுத் தரவில்லையா... ராகுலை நம்ப, இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா? இது எந்த அளவுக்கு உண்மை? 

ராகுலே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், விடிவெள்ளி, எதிர்காலம் என ஊடகங்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டு, மாறி மாறி, "ஏற்றி விட்ட உசுப்புகளுக்கு' இவர் உகர்ந்தவர்தானா, தகுந்தவர்தானா? 

வறண்ட இந்தியாவை, வளர்ந்த இந்தியாவாக மாற்ற, பல நீர் மேலாண்மை ஜாம்பவான்கள், நதிகள் இணைப்பு என்ற திட்டம் தீட்டி கொடுத்ததை, வல்லவர் வாஜ்பாய் அமல் செய்ய நினைத்தபோது, ஆட்சி மாறியது. ஒரே வீச்சில், ஒரே பேச்சில், நதிகள் இணைப்புக்கு, ராகுல் தடை சொன்னபோது, அவரது முதிர்ச்சியின்மையின் முதல் வெளிப்பாடு. 

ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என இந்தியா இரண்டாக உள்ளது என்றார் ராகுல். இதற்கு யார் காரணம்? 50 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட உங்கள் குடும்பமா என்றபோது, பதில் சொல்ல வார்த்தையின்றி தவித்தது இரண்டாம் வெளிப்பாடு.

கேரள முதல்வர், "அச்சுவை' வயதை காரணம் காட்டி இகழ்ந்தார். தனது கூட்டணியில், 86 வயது கருணாநிதியை வைத்துக் கொண்டு... இது, மூன்றாம் வெளிப்பாடு.

இது ஒருபுறமிருக்க, அழைக்கும் இளைஞர்கள் உழைக்க, இவரால் உகந்த இடம் தர முடிந்ததா? கடந்த, 2009 லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சரவையை தீர்மானிக்கும் இடத்தில் இவர் இருந்தார். இந்த வல்லமையை இவர் எப்படி பயன்படுத்தினார்? யார் யாருக்கெல்லாம் சீட்டு கொடுத்தார்... அமைச்சர் பதவி கொடுத்தார்... பார்த்தோமென்றால், இவர் மீது இருக்கும் பரவசங்கள் பறந்து போகும்.

காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற, 208 பேரில், 78 பேர் பரம்பரை குடும்ப அரசியல்வாதிகள். இதில், 19 பேர், குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சர் எம்.எல்.ஏ., எம்.பி.,யாக உள்ளனர். இவர் டிக்கெட் கொடுத்த இளைஞர் காங்கிரசை சேர்ந்த, 30 வயதிற்குட்பட்ட, 33 எம்.பி.,க்களுக்கும், முழு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 

மன்னராட்சி மறைந்தது உண்மைதான். ஆனால், மன்னராட்சியில் இருந்த வாரிசு அரசியல், ஜனநாயகத்திலும் தொடர்கிறது. இப்பிரிவிற்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. 

இந்திராவிற்கு பேரனாகவும், ராஜிவுக்கு மகனாகவும் பிறக்காமல் போயிருந்தால், காங்கிரசில் இவர் இருக்கும் இடம் யாருக்கு தெரிந்திருக்கும்?

Icon

No comments: