Pages

Monday, July 24, 2017

இனி இது ‘காவிகளின்’ தேசம்


இந்நாடு என்றைக்கு கருப்புகளின் தேசமாகவோ, சிவப்புகளின் கூடாரமாகவோ இருந்தது?

கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்பே தோன்றிய பாரதம் ஆஞ்சனேயனும், அர்ச்சுனனும், பரசுராமனும், பலராமனும், ஸ்ரீ கிருஷ்ணனும், சிவாஜியும், ராணா பிரதாபனும், தங்கள் தேர்களில் மாளிகையில் பறக்க வைத்த கொடி காவிக் கொடி. அதன் கீழ்தான் அவர்கள் ஆட்சி! அப்போதும் இந்நாடு ‘காவி தேசம்தான்’ இன்றும் ‘காவி தேசம் தான்’. இப்போது புதிதாக நீங்கள் சொல்லிதான் இது காவிதேசமாகிவிடப் போகிறதோ? என நீங்கள் கேட்பதும் புரிகிறது!

 இந்த நாட்டின் ஜனாதிபதி, துணைஜனாதிபதி (ஆர்.எஸ்.எஸ்ல் பயிற்சி எடுத்த திரு. ராம்நாத் கோவிந்த், திரு. வெங்கையா நாயுடு ஆகியோர்) ஆக பதவியேற்றிருப்பர். ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்ஸின் முழு நேர ஊழியராக (பிரச்சாரக்) இருந்த திரு. அடல்பிஹாரி இந்நாட்டின் முதல் ஆர்.எஸ்.எஸ். பிரதமராக பதவியில் இருந்திருக்கிறார். தற்போது மீண்டும் ஒரு ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரே பிரதமராயிருக்கிறார்.
பாரத நாட்டில் இந்த நூற்றாண்டில் அதிகமாக எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டார்கள் இருவர்தான்.

ஒருவர்ஆர்.எஸ்.எஸ். என்கிற இயக்கம். இரண்டாவது பிரதமர் நரேந்திர மோடி. இந்த எதிர்மறை விமர்சனங்களில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை அறிந்து கொண்ட மக்கள், மோடிக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதை அமெரிக்காவின் ‘போர்பஸ்’ பத்திரிக்கையும் கடந்த மாத பதிப்பில் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் மோடி அரசாங்கத்தை நாட்டின் 73% சதவீத மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதோடு உலக நாடுகளில் மக்கள் அதிக அளவில் ஆதரிக்கும் அரசுகளில் இந்தியாவின் மோடி அரசு முதலிடத்தையும் பெற்றுள்ளது!
ஆர்.எஸ்.எஸ். தான் இந்நாட்டை ஆள்கிறது! ஆர்.எஸ்.எஸ். தான் பாஜகவை ஆட்டிப்படைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்களை உங்கள் எழுத்து உறுதி செய்கிறதே என நீங்கள் கேட்கலாம்!

ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு, தேசபக்தி இவைகளை புகட்டுவது ஆர்.எஸ்.எஸ். ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ். ஊழியனும் இதை தன் வாழ்நாளில் செயல்படுத்துகிறான்! ஒரு மகனின் / மகளின் வளர்ப்பில் தாயின் குணம் எப்படி வெளிப்படுகிறதோ அது போலத்தான் இதுவும். இதற்குமேல் விளக்கம் வேண்டுபவர்கள் விதண்டாவாதிகள்!
சரி சப்ஜெக்டுக்கு வருவோம்! சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் கழித்து நாட்டின் மிகப் பெரிய பதவியான ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவியை காங்கிரஸ் கட்சி அல்லாதவர் ஒருவர் அலங்கறித்திருக்கிறார்அதாவது
 காங்கிரஸ் கட்சியின் கடைசி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி என்றாகி இருக்கிறது!

தற்போது பாஜகவிற்கு சூழ்நிலை சாதகமாக இருக்கிறது. இதை வைத்து எப்போதுமே பாஜக வெற்றி பெறும் என்று எப்படி நீங்கள் கூறலாம் என நீங்கள் கேட்பதும் கேட்கிறது!

ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை காங்கிரஸ் அல்லாதவர் ஆளமுடியும் என்பது கனவாகவே இருந்தது. பாஜகவின் மீது தொடுக்கப்பட்ட ‘இந்துத்வா’ ‘மதவாத’ குற்றச்சாட்டு காற்று முழுவதும் நிறைந்திருந்தது. எதிர் சித்தாந்தத்துக் காரர்களின் அத்தனை கணக்குகளையும் உடைத்து மோடி மத்தியில் ஆட்சியை கைப்பற்றினார்.

இன்று இந்தியாவின் நிலை என்ன? வேண்டாம், வரக் கூடாது, ஆட்சி அமைக்க விடமாட்டோம் என்று எதிர்க்கப்பட்ட கட்சி நாட்டின் 31 மாநிலங்களில் 17 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. 31 மாநில சட்டசபைகளில் மொத்தம் 1410 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. நாட்டின் 60 ஆண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி தேய்ந்து 5 மாநிலங்களில் மட்டும் ஆட்சி செய்கிறது. அதில் கர்னாடகம் மற்றும் பஞ்சாப் மட்டுமே பெரிய மாநிலம். மொத்தம் 786 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அதன் கணக்கில் உள்ளனர்.

நாடு முழுவதையும் தன்வசம் வைத்திருந்த காங்கிரஸ் இன்று 4 மாநில சட்டமன்றங்களில் ஒரு இடம் கூட பெறவில்லை! இதுதான் காலத்தின் கோலம்! இதுதான் இந்துத்வா எதிர்ப்பாளர்களுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு.

உ.பி. சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இந்த வெற்றி மக்கள் மன மாற்றத்தின், இதுவரை ஆண்டவர்கள் போலியானவர்கள் என்பதை நிரூபித்ததற்கான ஆதாரம்! அங்குள்ள வாக்காளர் எண்ணிக்கை பாஜகவிற்கு ஓட்டளிக்கமாட்டார்கள் என்று பிரச்சாரம் செய்யஅப்பட்ட மைனாரிட்டிகள் 22 சதம் இருந்தனர். 96 சட்டமன்ற தொகுதிகள் வெற்றியை அவர்களே தீர்மானிப்பார்கள் என்றிருந்தது. ஆனால் நடந்தது என்ன? 66 சட்டமன்றம் பாஜக வெற்றி!

இது அடுத்த தலைமுறையை பாஜக ஆளும் என இந்த தலைமுறை செய்த முடிவாகும்!

1984 பொதுத் தேர்தலில், அது இந்திரா காந்தி சுடப்பட்டதற்கு பிறகு நடைபெற்றது, பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. கட்சியை கலைத்து விடலாம் என்று கூட சிலர் பேசினார்கள். 1996ல் அமைந்த ஆட்சியை ஆதரிக்க எந்த கட்சியும் தயாரில்லாததால் 13 நாட்களில் ஆட்சி முடிந்தது!

இன்றென்ன பார்லிமெண்ட் நிலை! லோக்சபாவில் பாஜக கூட்டணி 336, காங்கிரஸ் 44. ராஜ்ய சபாவில் பாஜக கூட்டணி 74, இன்னும் இரண்டு ஆண்டில் ராஜ்யசபாவிலும் பாஜக மெஜாரிட்டி பெரும் என்பது அரசியல் மாற்றம் எவ்வளவு வேகமாக அரங்கேறுகிறது என்பதற்கு அத்தாட்சிகள்!

இந்த அரசியல் மாற்றம் நிரந்தரமானதா? எப்போது வேண்டுமானாலும் மக்கள் எதிராக திரும்பலாம் அல்லவா? என்பதும் சிலரின் சந்தேகங்கள்!

நேற்றைக்கு விடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி திரு. பிரனாப் முகர்ஜி தனது டுவிட்டரில் ”இந்தியாவை ஒரு சிறந்த தேசபக்த பிரதமரிடம் விட்டு செல்கிறேன்” என தனது நம்பிக்கையை தெரிவித்திருப்பதுதான் ஒரு பானை சோற்று உதாரணம்!

ஒரு பக்கம் நமது வெளியுறவு உச்சம் பெற்று கொடிகட்டி பறக்கிறது. முன் எப்போதும் இல்லாத இந்தியாவிற்கு உலக நாடுகளின் அங்கீகாரம்! இன்னும் சொல்லப்போனால், இன்று நாம் உலகத் தலைவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர்!
சீனா, பாக் உள்ளிட்ட அச்சுறுத்திய அண்டைநாடுகள் கட்டுக்குள் வைக்கப்பட்ட, அடக்கி வைக்கப்பட்ட நிலை 60 ஆண்டுகளில் முதல் முறையாக நடந்துள்ளது!

நாட்டின் வளர்ச்சி தாரக மந்திரமாகி, அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சிக்கான இன்றைய விதை, பண மதிப்பிழப்பு, நாடு முழுதும் ஒரே வரி என்ற சீர்திருத்தம் தூவப்பட்டுள்ளது! இந்த தைரியஅமான செயலை உலகமே பார்த்து வியக்கிறது!

ஏதோ பாஜகவின் வளர்ச்சி, உயர்ச்சி, ஆட்சி பற்றியே எழுதிக் கொண்டு போகிறீர்களே இதற்கும் உங்கள் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகமும் எனக்கு புரிகிறது!

‘இந்துத்வா’ அல்லது ‘காவிமய’ சித்தாந்த குற்றச்சாட்டுகளுக்கு சொந்தக்காரன் ‘வரவே முடியாது’ என்றார்கள். வந்துவிட்டோம்! அதுமட்டுமல்ல நாடு முழுதும் இந்திய வரைபடம் அவர்கள் கொடுக்கப்பட்ட கலரின் காவிமயம்! (நமக்கு எல்லா நிறமும் நம் நிறம்தான். காவி மீது ஒரு தனி மரியாதை அவ்வளவுதான்) இந்த மாற்றங்களை விளக்கவே சட்டமன்ற (நாடாளுமன்ற) ஆட்சி புள்ளிவிவரங்கள்!

இனி இதை எப்படி தக்க வைத்துக் கொள்வீர்கள்? என நம் ஆதரவாளர்களும் கேட்பது புரிகிறது!

மக்கள் நல அரசு, மக்கள் நலனோடு நின்று விட்டால், நலன் தொடரலாம்! அரசு தொடருமா என்பது சந்தேகமே! 1996ல் மிகச் சிறப்பாக செயல்பட்ட மத்திய பிரதேச சந்தர்லால் பட்வா அரசு கட்சி தொண்டர்கள் மக்களை சந்திக்க மறந்ததால் தோற்றது!
தற்போதைய பாஜக கட்சியும் மக்களும் இரண்டற கலக்க, இடைவிடாது பணிபுரிகிறது!
உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்துவிட்டோம் என்ற மமதையில் இல்லாமல், தொடர்ந்து வெற்றிபெற்று வரும் மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் மக்களை அமீத்ஷா முதல் அடிமட்ட தொண்டன் வரை சந்திக்கும் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ நடந்து வருகிறது.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ‘நாட்டுக்காக நம்மை அர்ப்பணிப்போம்’ என முழுநேரம் கொடுத்து இயக்கப்பணி செய்யும் தன்னார்வ தொண்டர்கள் எண்ணிக்கை வெள்ளம் போல உயர்ந்து வருகிறது!

ஒரு மிகச் சிறந்த தொழிலதிபர் தன் தொழிலின் விஸ்தரிப்புக்கு ‘எல்லைகளை நிர்ணயிக்காது’ ‘எல்லையில்லாது’ விஸ்தரிப்பை தொடர்வது போல, கட்சியின் மக்கள் சந்திப்பு மற்றும் விஸ்தரிப்பு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது!

சித்தாந்தம் என்பது இதயத்தில் இருத்தியது! சிந்தனையில் கலந்தது! அது நாம் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும், அதிலே இரண்டற கலக்கும்! இதற்கு இதை கற்பித்த குரு அருகிலிருக்க வேண்டும், போன் போட்டு சொல்ல வேண்டும், இருவர் இடையேயும், கயிறு போட்டு கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை!

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அரசியல் செயல் வடிவம் பாஜக என்பது மறைக்க வேண்டிய ரகசியமல்ல! அரசியல் களமில்லா மற்ற களங்களில் இதை கொண்டு சென்று கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள் போல, அரசியல் களத்தில் பாஜக எடுத்துச் செல்கிறது!

இந்த இரண்டின் கூட்டுத் தொகை இப்போது வெற்றிகளை குவித்து வருகிறது!

ஆதலால் இது என்றென்றும் காவிதேசம். என்றாலும்

இனிமேல் இது ‘காவி களின்’ தேசம்!

No comments: