Pages

Wednesday, May 21, 2014

கோபாலகிருஷ்ணன் காந்திக்கு ஒரு மனம் நிறைந்த பதில்


"தி இந்து" .. அவசரம் அவசரமாக வாங்கி வெளியிட்ட உங்கள் (திரு.கோபாலகிருஷ்ணன் காந்தியின் )----மனம் திறந்த மடல்..படித்தேன்..
தனது ஆங்கிலம் மற்றும் தமிழ் பதிப்புகளில் இக்கடிதத்தை வெளியிட்டு “இந்து” நரேந்திர மோடி மீதிருந்த தனது “துவேஷத்தை” உங்கள் மூலம்வெளிப்படுத்திக்கொண்டது..

பிரதமருக்காக தனது ஆதரவை ஏகோபித்த அளவில் தெரிவித்த கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல்..கொஞ்சம் காலம் கூட பொறுத்திருந்து பார்க்காமல் ”இந்து” தனது வக்கிரத்தை மீண்டும் வெளிக்காட்டியுள்ளது எதிர்பார்த்ததுதான்.

இறுதியாக மோடி வெற்றிவாகை சூடிவிட்டார்..

இந்தியாவிலுள்ள “அறிவு ஜீவிகள்” அத்தனை பேரும் தங்களுக்கு தெரிந்த “பித்தகோரஸ்” தியரத்திலிருந்து, “பித்துபிடித்த” தியரங்கள் வரை, அத்தனையும் கூட்டி கழித்து போட்டு பார்த்து “ மோடி வரமுடியாது..ஜெயிக்க முடியாது....ஜெயித்தாலும் பிரதமராக முடியாது”..’..என்ற வெளியிட்ட அத்தனை கணக்குகளும் பொய்த்து போய்விட்டபடியால், இப்போது “திறந்த மடல்கள் “ எழுத துவங்கியுள்ளனர்..அதன் வெளிப்பாடுதான் கோ.காந்தியின் நரேந்திர மோடிக்கான திறந்த மடலை இந்து வெளியிட்டதின் மர்மம்.

இனி விஷயத்துக்கு வருகிறேன்..

காந்தி குடும்பத்திலிருந்து வந்திருந்த படியாலும், பாட்டன் சம்பாதித்த நற்பெயரை பேரன் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையிலும், கடிதத்தை படிக்க ஆரம்பித்தால், ....கொஞ்சம்நாள் ஆம் ஆத்மிக்கு போய் வந்ததே இவ்வளவு “ஆழ் மனது வக்கிரங்களை” உங்களுக்குள் ஏற்படுத்தி இருப்பது உங்கள் எழுத்தில் வெளிப்படையாக தெரிந்தது.

“இப்போது அடைந்திருக்கும், உச்சபட்ச பதவியில், உங்களை காண விரும்பியவர்களில், ஒருவனல்ல நான்”

“நீங்கள் பிரதமராவது குறித்து கோடிக்கணக்கானோர் பரசவப்படுவது போல, கோடிக்கணக்கானோர் வருத்தமுற்றிருக்க கூடும்”

மோடி பிரதமராவதை விரும்பாத கோஷ்டியை சேர்ந்தவர் நீங்கள் என்பதும், ஒருசில.. வருத்தப்படும் வயதானவர்களில் நீங்களும் ஒருவர்  என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டது..பின் ஏன் இக் கடிதம் எழுத வேண்டும்?
 எதிர்ப்பாளர்களிடமிருந்து “அட்வைஸ்” ஏன் வேண்டும்? நீங்கள்தான் என்ன நன்மைகள் செய்தாலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையே..

என்னுடைய விமர்சனத்தில் “ஆழ்மனது வக்கிரம்” என்று குறிப்பட்டது மேலே சொன்ன உங்கள் வார்த்தைகளிலிருந்து உண்மை என்பது தெளிவாகிறது அல்லவா?

” 31 சத ஓட்டுக்கள் மட்டும் பெற்ற நீங்கள் எப்படி தேசத்தின் ரக்‌ஷகன் ஆவீர்கள்?..69 சதம் உங்களுக்கு எதிர்ப்புத்தானே ” என்ற உங்கள் வரிகள், 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரசும் 40 சதவீதத்திற்கும் குரைவான ஓட்டுக்களை பெற்றே நாட்டை ஆண்டது –60திலிருந்து 70 சதவீத மக்கள் அதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள் ----என்பதை நீங்கள் ஏற்க மறுக்கிறிர்கள் என்பது புரிந்தது--.

நாம் “வெஸ்ட் மினிஸ்டர் “ மாடல் பார்லிமெண்டரி ஜனநாயகத்தை பின் பற்றுவது உங்களுக்கு தெரியாததா? அதிக ஓட்டுவாங்கியவரின் ஓட்டு சதத்தை மொத்தஓட்டில் கழித்து, ”எதிர்ப்பு ஓட்டு என்று கருணாநிதி போடும் கணக்கை” போன்ற உங்களின் வாதம் ”தோல்வியை ஒத்துக்கொள்ள மறுக்கும் உங்களின்  மனம் ”என எடுத்துக்கொள்ளலாமா?

“சிறுபான்மையினர் தொடர்பாக அரசமைப்பு சட்டம் கொண்டிருக்கும் லட்சியத்தை உங்கள் நோக்கத்திற்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைக்கவோ நீர்த்துப்போகவோ செய்யாமல், அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் மோடி அவர்களே”—-----என்ற உங்கள் கோரிக்கை காங்கிரசுக்கும் பொருந்தும் அல்லவா. ? 

தாழ்த்தபட்டோருக்காக மட்டுமே அண்னல் அம்பேத்காரும் உங்கள் தாத்தாவும் பெற்றுத்தந்த சலுகைகளை மதம் மாறிய கிற்ஸ்தவர்களுக்கும் தாரை வார்த்ததை நீங்கள் ஏண் தட்டிக்கேட்க வில்லை என நாங்கள் கேட்கலாமா? 

தாழ்த்தபட்டவருக்காக மோடியை குரல் கொடுக்கச்சொல்ல உங்களுக்கு “தார்மீக உரிமை இல்லை என்பதை நீங்கள் ஏன் நினைத்துப்பார்க்கவில்லை?—ஏனெனில் “அட்வைஸ் செய்வது சுலபம்..வாழ்ந்து காட்டுவது கடினம் “நீங்கள் முதலாம் ரகத்தை சேர்ந்தவர் என்பதை ஒப்புக்கொள்கிறீகளா?

இந்நாட்டின் மையக்கலாச்சாரம் “மதசார்பின்மை”..இதை போதித்தது இந்துதர்மம்..ஆர்.எஸ்.எஸை டி.என்.ஏ யில் உள்ள மோடி முதல் ஆர்.எஸ்.எஸையே தெரியாத அறியாத கோடிக்கணக்கான இந்தியனின் டி.என்.ஏ யிலும் “சர்வா ஜனதோஸ்து சுகினா பவந்துதான்” உள்ளது..இதை நீங்களோ அரசமைப்பு சட்டமோ எங்களுக்கும் கற்றுத்தரவேண்டாம்..

மக்கள் அமைதியாக இருக்கும் போது உங்களின் இந்த உபதேசங்கள் “மைனாரிட்டிகளை உசுப்பிவிடமட்டுமே செய்யும்..வேறு நற்பலன்களை அவர்களுக்கு தராது.என்பதை நீங்கள் ஏன் அறியவில்லை?

சச்சார் கமிட்டி அறிக்கையில் “மைனாரிட்டிகளை காக்கும் மஹானுபாவன்” என குஜராத் அரசையே சுட்டிக்காட்டியுள்ளது..காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை அல்ல..இது தெரிந்தும் நீங்கள் எழுதுவது உங்கள் “நம்பகத்தன்மைக்கு “ ஒரு கேள்விக்குறியாகவே நான் பார்க்கிறேன்.

பிரதமர் தவிர ( நேரு குடும்பத்திற்கு மட்டுமே அது குத்தகை) வேறு பதவிகளில் ஒன்றை கொடுத்து விட்டு “மைனாரிட்டிகளை” ஏமாற்றிவரும் ஜாலம் காங்கிரசுக்கு மட்டுமே தெரியும்.என்பது உங்களுக்கும் தெரியும்

உப்பு தடவிய பிரம்பு உதராணம் மூலம் நீங்கள் ஒரு உண்மையை போட்டு உடைத்திருக்கிறீர்கள்.உங்கள் கடிதத்தின் “ஒரு சார்பு நிலைக்கு “ இதுவே சாட்சியம்..

“தப்பு செய்தால் தலைமை ஆசிரியர் எப்படியெல்லாம் தோலை உரிப்பார்” என்ற வரிகளின் மூலம் “ மைனாரிட்டிகள் தப்பு செய்வார்கள் என்றும், அதற்கு தண்டனை தரக்கூடாது என்றும். மோடியை கட்டுப்பாடான ஒரு தலைமை ஆசிரியராகவும்.,மாணவர்களை ( மைனாரிட்டிகளை )அவர் கண்டிக்க கூடாது எனவும். தெளிவாக சொல்லி மைனாரிட்டிகளை தாஜா செய்யும் போக்கை ஊக்குவிக்க சொல்லியுள்ளீர்கள்.

முசாஃபர் நகர் கலவரம் உ.பி மாநிலத்தில் காங்கிரசின் கூட்டாளி முலயாம் சிங்கின் சமாஜவாடி ஆட்சியில் நடைபெற்றதை மோடியின் கடிதத்தில் குறிப்பிடும் உங்கள் உள் நோக்கம் என்ன? மைனாரிட்டிகள் எங்கு தவறு செய்தாலும்,பாதிக்கபட்டாலும் அதற்கு ஏக போக குத்தகைதராராக மோடியைத்தான் ஆக்குவீற்களோ?

“முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்தியாவின் மத சிறுபாம்ன்மையினர் அனைவரும், தங்கள் மனதில் ஆழமான வடுக்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள்”..என்று எழுதியிருக்கிறீர்கள்..

உலகிலுள்ள எந்த நாட்டிலும் இல்லாத சுதந்திரமும் சமத்துவமும், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு உள்ளது என்பது தங்களுக்கு தெரியாததா? பாகிஸ்தானிலும். வங்க தேசத்திலும். இந்துக்களுக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளது என்பதை நவாஸ் ஷெரிஃபிடமும் கலிதாஜியாவிடமும் கேட்டு சொல்லுங்கள்..ஏன் இலங்கையில் தமிழ் சிறுபான்மையினருக்கு என்ன உரிமை சலுகை என உங்கள் நண்பர் ராஜபக்‌ஷேவிடம் கேட்டு சொல்லுங்கள்..

முஸ்லீம் நாடுகளில் கூட அவர்களுக்கு கிடைக்காத சலுகைகள் இந்தியாவில் அவர்களுக்கு கிடைக்கிறது என்பதை நீங்கள் ஏற்க மறுப்பது ஏன்?
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் “மைனாரிட்டிகளை உசுப்பிவிட்டு தேசிய நீரோட்டத்துடன் அவர்களை சேரவிடாமல் செய்யும்  பேச்சுக்களை தொடரப்போகிறீர்கள்?

கடந்த 12 ஆண்டுகாலமாக “உங்களை போன்ற எல்லோரும் ஓரணியில் திரண்டு” நரேந்திர மோடி மீது அபாண்ட தாக்குதல்களை நடத்தியதற்கு. இந்திய மக்கள் ஓட்டுச்சீட்டின் மூலம் அவருக்கு “நியாய தீர்ப்பு” வழங்கிய பின்னரும் ஏன் உங்கள் புலம்பல்கள் குறையவில்லை? புத்தி தெளிய வில்லை?

மோடியின் டி.என்.ஏயில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதால்தான் அவர் 125 கோடி மக்களும் ஒன்று என்று சிந்திக்கிறார்.. காங்கிரசை போல் ”தேர்தல் மதசார்பின்மை” மட்டுமே இருந்திருந்தால் உங்களை போல் மைனாரிட்டிகளை பிரித்துப்பேசி. “கடிதம் எழுதிக்கொண்டிருப்பார்”

இனியாவது மைனார்ட்டி—மெஜாரிட்டி என பிரித்துப்பேசி, “உசிப்பிவிடுவதை” தவிருங்கள்..125 கோடி மக்களும் ஒன்று என்ற “சித்தாந்தத்தை” துவக்குங்கள்..பிரித்தாளும் நரிகளை துரத்துங்கள்..

மோடியின் ஆட்சியில் எல்லோரும் நலமாக இருக்கப்போகிறார்கள்..நீங்கள் உட்பட….அதை ஜாதி..மொழி…மதம் வாரியாக பார்க்காமல்…”ஒன்றாக “ பாருங்கள்..

இனி உங்களுக்கு ஓய்வெடுக்கும் காலம் .--.கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள்..

நன்றி..ஜெய்ஹிந்த்..வந்தேமாதரம்..பாரத் மாதாகீ ஜெய்